Trending

Tuesday 24 January 2017

ஜல்லிக்கட்டு - இடதுசாரிகள்

கேட்டினும் உண்டோ உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

என்ற குறளுக்கு ஜல்லிக்கட்டு விவகாரம் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

இந்திய தேசியம் குட்டுகிறது, குடைகிறது எனவே தனி நாடு வேண்டும் என்று ஜல்லிக்கட்டு இளைஞர் எழுச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதிகள் எல்லாம் தமிழ்த்தேசியவாதி முகமூடியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும் தி.க. விஷம் ஏறியவர்களும் தான். இவர்கள் கேட்பதுபோல ஒருவேளை தனி நாடு கொடுத்தால் அதைக் கொண்டாடவே பசுவைக் கொலை செய்து பிரியாணி போடுவார்கள்.


Image result for COMMUNISTS JALLIKATTU


இதே இடதுசாரிகள், சில நாட்கள் முன்பு வரை ஜல்லிக்கட்டு தடை செய்தது சரியே, அது ஜாதிய நிகழ்வு தேவர் ஜெயந்திக்கு ஒப்பானது என்றெல்லாம் எழுதினர். பின்னர் பிரித்தாள்வதர்காக ஜல்லிக்கட்டு தெலுங்க நாயக்கர் புகுத்தியது மஞ்சுவிரட்டுதான் தமிழருடையது என்றனர். உண்மையில் ஜல்லிக்கட்டு பண்டைய மரபு என்ற உண்மையை உணர்த்தும் இலக்கிய, நடுகல், ஆதாரங்கள் ஏராளம் இருந்துமே தூங்குவதுபோல நடித்துக் கொண்டிருந்தவர்கள். இப்போது உள்ள மாணவர் எழுச்சியில் அரசியல் ஆதாயம் அறுவடை செய்ய ஜல்லிக்கட்டு ஆதரவு முகமூடி அணிந்து வருகிறார்கள்.

மாணவர் ஒற்றுமையை போராட்ட களத்தில் எவ்வளவு தூரம் தங்கள் அரசியல் சுயநலத்துக்கு திசைதிருப்பிக் கொள்ள முடியும் என்பதிலேயே குறியாக இருந்தனர். போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஜல்லிக்கட்டை அனுமதிப்பது பற்றி மட்டுமே பேச சொல்லியிருந்தும் மோடி வெறுப்பு, தேச வெறுப்பு, ஹிந்து மத காழ்ப்புணர்ச்சி, எங்கெங்கும் கறுப்பு சட்டைகள் என்று அதிக்களம். அருவருப்பான அசிங்கமான நிகழ்வுகள்.

மறுபக்கம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பவும் நீர்த்துப் போகச் செய்யவும், ஒரு பகுதி இடதுசாரிகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டை விமர்சித்தும், ஜாதி சாயம் பூசிக்கொண்டும் இருந்தனர். மறுபுறம், இடதுசாரி சிந்தனையாளர்கள் நாட்டுப்பசுக்களின் தேவைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படும் A1-A2 கருத்தாக்கத்தைப் பொய் என்று கூறி கட்டுரை வரைந்தனர். இந்த கருத்தாக்கம் உருவாகி இத்தனை வருஷம் கழித்து இப்போது அதுவும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் வர காரணமென்ன? அதில் அவர்கள் சொல்வது, இந்த A2பால் கொள்கை கண்டறியப்பட்ட நியூசிலாந்தில் கூட இன்னும் A1 பால் தடை செய்யப்படவில்லையாம்; A1 பால் நோய்களை உருவாக்குவதற்கு ஆதாரமில்லையாம்.
சரி, இந்த குற்றச்சாட்டுக்களைப் பார்ப்போம்.. A2-பால் கொள்கை கண்டறியப்பட்ட நியூசிலாந்தில் கூட இன்னும் A1 பால் தடை செய்யப்படவில்லை – இந்தியாவில் கொக்க கோலாவில் விஷம் இருப்பது கண்டறியப்பட்டது, தடை செய்யப்பட்டதா? மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு விலக்கு ஏன் அளிக்கப்பட்டது? ரஷ்யாவில் சீனாவில் கொக்க கோலா விற்பனையில் இல்லையா? ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் கதிதான் இது. அதேசமயம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு நாடுகளில் A2 பால் விற்பனை பெருமளவு (மொத்த நுகர்வில் 10%) உயர்ந்துள்ளது என்பதை வசதியாக மறந்துவிட்டனர். A1 பால் நோய்களை உருவாக்குவதற்கு ஆதாரமில்லை – A1-A2 தியரியை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஆய்வறிக்கைகள் வந்துவிட்டன. அதுஒருபுறம். இந்த ஆதாரமில்லை கோஷம் A2 பால் விற்பனையால் பாதிக்கப்பட்ட பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகளின் தூண்டுதலால் எழுந்தவை. பான்டேரா என்ற நியூசிலாந்து கூட்டுறவு கார்பரேட் நிறுவனம் உலகின் மொத்த பால் வணிகத்தில் சுமார் நாற்பது சதவீதம் அளவு வணிகம் செய்யும் பூதாகர நிறுவனம். கலப்படம், ஊழல், லஞ்சம என்று பல வழக்குகளோடு விளையாடும் நிறுவனம்.

ட்ரஸ்வெல் என்ற ஆய்வாளருக்கு பணம் கொடுத்து அவர்கள் A1-A2 தியரியை பொய்யென்று உரைக்க பான்டேராவும் அதன் பங்காளி நிறுவனங்களும் தூண்டிவிடுகிறார்கள். அவரும் இந்த நிறுவனத்தின் விழாக்களில் அச்சிடப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் A1-A2 தியரியை பொய்யென்று நிறுவ கட்டுரை வரைகிறார். இந்த கார்பரேட் சதியை A1-A2 தியரி எழுதிய கீத் வுட்போர்ட் அம்பலப்படுத்தியும் உள்ளார். இவை அனைத்தையும் மறைத்து கார்பரேட் எஜமான்களின் ஏவலுக்கு வளைந்து “கம்யூனிஸ்ட்”கள் கட்டுரை எழுதியுள்ளனர்.

இவர்கள் உண்மையில் பசுவின் மீது அக்கரையோடு இருப்பார்களேயானால் தமிழர்-உழவர் வாழ்வின் அஸ்திவாரமான நாட்டுப்பசுக்கள் அழிவின் விளிம்பில் உள்ளன; அவை கொலைக்களத்துக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு ஏற்றுமதி செய்யபடுகின்றன. எனவே இதைத் தடுக்கிறேன் என்று லாரிகளை மறிக்கட்டும் பார்ப்போம். அல்லது பசுமாமிச ஏற்றுமதியையும் சப்சிடியையும் நிறுத்தச் சொல்லி மோடி சர்க்காரை எதிர்த்து போராடட்டும்; நானும் கூட வருகிறேன். செய்யமாட்டார்கள்.

சரி, விவசாயிகள் நூற்றுக் கணக்கில் மரணமடைகிறார்கள். உலகமய-கார்பரேட் பொருளாதார கொள்கைகள் நாட்டையும் மக்களையும் சீரழிக்கிறது. ஏராளமான பிரச்னை மத்திய சர்க்காரால் ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்க வருஷம் முழுதும் போராடிக் கொண்டே இருக்க முடியாது. மத்திய சர்க்கார் பாராமுகமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோலவே இருக்கட்டும். நிரந்தர தீர்வு என்ன?அரசு யாரையெல்லாம் பார்த்து பயப்படுகிறது? யார் குரலுக்கு செவி சாய்க்கிறது? எங்கெல்லாம் மக்கள் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் சர்க்கார் மக்களிடம் அடங்கி செல்கிறது. காப் பஞ்சாயத்து வாடா மாநிலங்கள் சிலவற்றில் வலுவுடன் கிராமம் தோறும வேரூன்றியுள்ளது. காப் பஞ்சாயத்தை அரசாங்கம் பகைத்துக் கொள்வதுமில்லை, அவர்களைகே கோபப்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் பேசுவது கூட இல்லை. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஜமாஅத் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் சர்க்கார் அமைதியாக இருக்கிறது. அவர்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுகிறது.

எனவே, இனி மக்கள் கோரிக்கைகள் கேட்காமலே அரசு நிறைவேற்ற வேண்டுமானால், மக்களைக் கண்டு அரசு பயம்கொள்ள வேண்டும் என்றால் கிராமங்களை காப் பஞ்சாயத்து, இஸ்லாமியர்கள் போலவே அங்கங்கே கிராமம் கிராமமாக மக்கள் குழுக்களை கோயில் மையமாக உருவாக்கி ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பார்களா தமிழ் தேசியவாதிகள்? நிச்சயம் செய்ய மாட்டார்கள். காரணம், கிராமங்கள் இடதுசாரிகளை ஏற்றுக் கொள்ளாது. கிராமங்கள் ஒருங்கினைக்கப்பட்டால் இடதுசாரி பருப்பு என்றுமே வேகாது. அதனாலேயே கிராமங்களில் ஒற்றுமையின்மையையும், பதட்டத்தையும் தணியாமல் வைத்திருக்க இடதுசாரி சிந்தனையாளர்கள் எப்போதுமே விரும்புகிறார்கள்.

இவர்களது நோக்கம் உண்மையில் பசுநலனோ, தமிழர் நலனோ, கலாசார மீட்போ அல்ல. சுத்தமான அரசியல்.

தொடர்புடைய பதிவுகள்,

நாட்டுப்பசு, மற்றும் நாட்டுப் பசுவின் அவசியம்





No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates