Trending

Saturday 28 September 2013

ஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்

ஸ்ரீ முக்கண்ணீஸ்வரர்-முத்துமரகதவல்லியம்மன் ஆலய தகவல்கள்

நாட்டார்களுக்கு தங்கள் நாட்டில் எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் தங்கள் குலம் தழைக்க பிராதன சிவாலயம் என்பது மிக முக்கியமாகும். மொளசி கன்ன கூட்டம் மட்டும் அல்லாது அனைத்து மக்களுக்கும் இது பொருந்தும். தங்கள் குலத்தின் சிவனுக்கு முறையான வழிபாடு பூசைகள் இல்லாது போகுமாயின் சிவசாபத்தால் திருமணத்தடைகள், வம்ச விருத்தியின்மை, தொழில் நாசம், பூர்வீக சொத்துக்கள்-உரிமைகள் கைவிட்டு போதல், குல மரபுகள் விட்டு குடிகள் விலகிபோதல் என குல நாசம் ஏற்படும். தனது முன்னோர் பிரதிட்டை செய்த சிவாலய பூசைகள் நடைபெறாது போனதால் கரிகால சோழ மன்னனுக்கு சித்தபிரம்மை ஏற்பட்டது என்பதும், சித்தர்கள் மற்றும் ஞானிகள் உதவியோடு சோழனின் கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு பின்னரே நிவர்தியானது இதே கொங்கு மண்ணில் நடந்த வரலாறு. 

     மொளசி கன்னகுல பங்காளிகளுக்கு தலைமை சிவாலயம் என்பது மொளசி ஸ்ரீ முக்கண்ணீஸ்வரர் ஆலயமாகும். மொளசியின் முதல் பட்டகாரரான பிள்ளைப்பெருமாள் அவர்கள் காலம்தொட்டு வணங்கப்பட்டு வரும் சிவாலயமாகும். குலதெய்வ வழிபாடு முக்கண்ணீஸ்வரர் வழிபாட்டோடுதான் பூர்த்தியடையும் என்பதும் உண்மை.

     இவற்றை உணர்ந்த முன்னோர் மொளசி முக்கண்ணீஸ்வரர் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்தனர். காலம் தவறாது கும்பாபிசேகம் செய்து ஆலயபூசைகள் சரிவர நடக்க கட்டளைகள் ஏற்ப்படுத்தி வைத்தனர். முதல் பட்டக்காரர் பிள்ளைப்பெருமாள் காலத்தில் தோன்றிய இம்மரபை காலம்காலமாக தவறாது பின்பற்றி வந்தனர். இஸ்லாமிய படையெடுப்பு கோவில்களை அழித்து கொள்ளையிட்டு திருச்செங்கோடு வந்த போதும் முக்கண்ணீஸ்வரர் ஆலய தெய்வங்களை மண்ணுக்குள் ஒளித்து வைத்து காத்தனர். பிற்கால மொளசியாரும் குலதெய்வ வழிபாடு போலவே முக்கண்ணீஸ்வரர் வழிபாட்டை மேற்கொண்டனர். ஆனால் தற்போது முக்கண்ணீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடந்து சுமார் நூறு ஆண்டுகளை தொடப்போகிறது. தற்போது இக்கோவிலின் கலசங்கள் கூட திருடு போயுள்ளன. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குருக்கள் தனது கஷ்டத்தையும் பாராது தன்னால் இயன்ற அளவு கோயில் பூசைகளை செய்து வருகிறார். கோவிலை மீட்டு அதன் புராதன அழகு கெடாத வண்ணம் மிகவும் எளிமையாக சீரமைத்து குடமுழுக்கு நடத்துவது மொளசியார் வம்சதுக்கே மிகவும் அவசியமானதாகும்.

     உள்ளூரிலும் இதற்கு உறுதுணையாக இருக்க குழு உள்ளது. ஆனால் உரிமையுடைய மொளசி மக்கள் செய்வது பொருத்தம் என்ற காரணத்தால் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல், கோவில் பிற சமூகத்தவர் கைக்கு சென்று விடும். எத்தனையோ கோவில்களுக்கு செல்கிறோம், திருப்பணிக்கு உதவுகிறோம், சினிமா ஓட்டல என வெட்டி வேலைகளுக்கு நேரத்தையும் பணத்தையும் வீண் செலவுகள் செய்கிறோம். ஆனால் இதுபோன்ற அவசியமான வேலைகளுக்கு பொருளாகவோ, உழைப்பாகவோ அல்லது குறைந்தபட்சம் தைகள் தொடர்பு ஆதரவோ என மிக சிறிய உதவியானாலும் அது அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. கோவிலை மீட்க வேண்டும் என்று எண்ணுவோர் திரு முருகேசன் பெருமாள் அண்ணனை தொடர்பு கொள்ளவும் (94430 78244). உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லவும்.

(87 வயதாகும் திரு. நடராஜ குருக்கள் கோவிலை தற்போது பராமரித்து வருகிறார். உதவிகள் ஏதும் பெரிதாக இல்லாதபோதும் தனது தெய்வ கடமையை இத்தனை ஆண்டுகள் செம்மையாக செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான யாகங்களும் கும்பாபிசேகங்களும் செய்தவர். இவர் முருகனை போற்றி பாடத்துவங்கினால் முருகனே நேரில் வந்துவிடும் அளவு அற்புதமாக ஆத்மார்த்தமாக பாடுவார். அவர் கோவிலை பற்றியும் மொளசி நாட்டார் குறித்து எழுதிய சிறு குறிப்பு)


சிவ மயம்
கண்ணகூட்டம் (அ) கண்ணக்குலம் கூட்டம் என்பது கொங்கு மரபில் சிறப்பு வாய்ந்த்தொரு கூட்டமாகும். மற்ற கொங்கு வேளாளர் கூட்டங்களிலிருந்து மக்கள் எண்ணிக்கையிலும் அதிகமானவர்கள் இக்கூட்ட்த்தினரே! காணி பாதி கண்ணன் பாதி என்பது கொங்கு நாட்டு வழக்கு. கண்ணன் குலத்தின் காணி ஊர்கள்- கண்ணிவாடி, காகம்,  குழாநிலை, காளமங்களம்,  கீழாம்பாடி,  நசையனூர், காஞ்சிகோயில், மோரூர்,  மொளசியும், ஏவை, சம்பையும், கற்றூன்தூணியூர், வண்ணமேவிய ஆலந்தூர்பட்டணம், மனியனூருடன், ஓடை, தகடையூர், மண்டபத்தூர், காஞ்சிகோவில், கொன்னையாறுடன், ஆனங்கூரதும் கூடல், பாதிரை என்பனவாகும்.

   கி.பி.13ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை சீறும் சிறப்புடன் ஆண்டு வந்தனர் ,அப்போது கண்ணங்குல பட்டக்காரர் நல்லதம்பிகவுண்டர் சிறந்த போர் வீரம்,  தீரத்தையும் கண்டு கண்ணிவாடி என்கிற தலைய நாட்டுக்கு தலைவ்ர் ஆக்கினார்கள் தமிழ் வேந்தர்கள்.

  பிற்காலத்தில் வன்னியர்கள் ஆதிக்கம் இப்பகுதியில் வலுவடைய. கண்ண்குல பட்டக்காரன் தன் பங்காளிகளுடன் குடி பெயர நேரிட்டது. வேளாளர்களுடன் விவாஹ தொடர்பு வைத்து கொள்ள வன்னியர்கள் ஆசைப்பட்டார்கள், இதை வெறுத்த வேளாளர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறியதாக பழம் பாடல் ஒன்று கூறுகிறது.

  பள்ளி வேளாளர் பெண் கேட்டதால்
   கருநாயை கட்டி வைத்தான்
   தூவிரியைத் தாட்டி வைத்தான்
   அந்த காரிகுலா திபன்

அதனால் இவர்கள் காவிரியை கடந்து சேலம் வட்டப் பகுதிகளில் குடியேறினார்கள் என்பது உறுதியாகிறது. நல்லதம்பிகவுண்டன் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்தாள். அவர் தன் பங்காளிகளை கூட்டி கொண்டு அமராவதி ஆற்றை கடந்து புங்கன்கரை என்ற ஊருக்கு வந்தான், அது சமயம் சூரிய உதயத்தில் தன் மனைவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது,  சூரிய உதயத்தில் பிறந்த்தால் சூரியன் என பெயர் வைத்தார்கள். தலைய நாட்டை விட்டு வெளியேறிய நல்லதம்பி கவுண்டர் திருச்செங்கோட்டிற்க்கு அருகில் உள்ள மொளசை என்ற ஊரில் சில நாட்கள் தன் பங்காளிகளுடன் தங்கினான் என்று தெரிகிறது நல்லதம்பி கவுண்டருடன் வந்த சில குடும்பங்கள் அங்கேயே தங்க தீர்மானித்தனர், சில பங்காளிகல் மோரூர் பக்கம் வந்து ஆந்தை குலத்தார் ஆதரவில் வாழ்ந்த்தாக கூறப்படுகிறது. நாட்டு வேளாளர் இனத்தைச் சேர்ந்த மொளசி குலத்தினர் மோரூர் கண்ணங்குல வேளாளரின் பங்காளிகலே ஆவர். மொளசியிலிருந்து வந்து வாழ ஆரம்பித்தால் இவர்களை மொளசியார் என்று அழைக்கப்படுகிறார்கள். சூரிய காங்கையனரின் பரம்பரையினர் தான் இவரது காலத்திலிருந்துதான் மோரூர் கண்ணகல மக்கள் மோரூரர் என்றும்,மோரூர் நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர். சூரிய காங்கேய நாட்டை கி.பி.13ம் நூற்றாண்டு வரை சீரும் சிறப்புடன் ஆண்டு வந்தனர். இம்மன்னர்கள் வீரம், புலமை, ஈகை, சிறப்புற்று விளங்கினர். தமிழ் புலவர்களை ஆதரித்து அல்லாமல், தெய்வ பணிகளை செய்தலினும் சிறந்து விளங்கினார்கள். தேவ நகரமாகிய திருச்செங்கோட்டு மலையிலுல்ல அர்த்தானீஸ்வரர் கோவில், மண்டபங்கள், அடிவாரத்திலுல்ல கைலாச நாதர் கோவில் மண்டபங்கள் கட்டுவித்தார்கள். இவர்களே 16ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்பால் மலை மீதுள்ள கோவில் சிதைக்கப்பட்ட்து. இதை மீண்டும் புணருத்தாரண செய்தவர்கள் இக்காங்கேயத்தவர்களே ஆவர். இத்திருப்பணியில் தலை சிறந்து விளங்கியவர் திருமலை அத்தியப்ப நல்லதம்பி காங்கேயர், அவரது மகன் நல்ல தம்பி காங்கேயன் காலத்தில் மோரூர் பாம்பலங்கார கோவில் புதுப்பிக்கப்பட்ட்து எழுபது தண்டிகை பெற்று அறுபது மன்னர்கள் காங்கேயர்கள் காங்கேயர் என்ற பட்டத்துடன் மோரூர் நாட்டை ஆண்டு வந்த்தாக தெரிகிறது.

      மேலே குறிப்பிடப்பட்ட 16ம் நூற்றாண்டில்தான் திருச்செங்கோடுமலை அடிவாரம் கைலாசநாதர் கோவில் இஸ்லாமியர் படையெடுத்து சிதைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில்தான் மொளசி சிவாலயத்திலும் புகுந்து கட்டடங்களை சிதைத்துள்ளனர். அதற்க்கு முன் ஏற்பாடாக மொளசி சிவாலய காவலர்கள் , காவலர்கள் எல்லாம் சேர்ந்து கோவிலில் இருந்த செம்பு விக்கரங்களை பூமியில் மறைத்து விட்டனர் (விநாயகர்,அம்மன்,முருகன், வள்ளி,தெய்வானை 3 சுற்று நாகாபரணம் எல்லாம் செம்பு விக்கிரங்களை பூமியில் புதைத்து விட்டனர்.பிற் காலத்தில் 18ம் நூற்றாண்டில் மொளசியில் உள்ள சிவாலயம் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது கொக்கராயன்பேட்டையை தலைநகரமாக வைத்து விட்டம்பாளையத்தில் குடியிருந்த குறு நில மன்னர் ஜமீந்தார் அவர்கள் காலத்தில் மொளசி சிவாலயத்தை தன்குல தெய்வமாக கருதி திருப்பணி செய்து கும்பாபிஸ்ஷேகம் செய்துள்ளார். அவர் பெயர்தான் அப்பாவு கவுண்டர் அவர் காலத்தில் செய்த அரும்பணிகள்-சுற்றுமதில் பூராவும், பறிக்கப்பட்டு புதிதாக கல்லாலும் செங்கல்லாலும் கட்டியுள்ளார். சுற்று மதிலுக்கு அஸ்திவாரம் பறிக்கப்பட்டபோதுதான் தென்பறம் விக்கிரங்கள் பாம்பாபரணம், ஆக செம்பு விக்கரங்களை எடுத்துள்ளனர். புதிதாக கோபுரங்கள், சுவாமி, அம்பாள், முருகன் மூன்றும் கட்டி கற்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மஹா மண்டபங்கள் பரிவாரங்களுக்கு  சிறு கூடங்கள் அமைத்து குடமுழுக்கு செய்துள்ளனர். அது சுமார் 150 ஆண்டுகள் இருக்கும். அதன் பின் யாரும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.

   நிலத்திலிருந்து எடுத்த 6 விக்கிரங்களுக்கு ஒரு சப்பாரம் ஏற்படுத்தி மேளத்தாரையும் ஏற்படுத்தி அம்மாசைதோறும் ஊருக்குள்ளேயே மெரமனை நடந்தது.அதற்காக புறம்போக்கு நிலத்தில் 3 ஏக்கர் எழுதி வைத்தார். அதன் வுருமானத்தில் மெரமனை நடந்து வர ஒரு நாட்டு கவுண்டர் மொதலப்பாளையம் எளையப்பகவுண்டரை தர்மகர்த்தாவாக ஏற்பாடு செய்தார். அதன் பிறகு மிட்டாதாரர்கள் கணபதி கவுண்டர் பெரியசாமி கவுண்டர் கவனித்து வந்தார்கள். மிட்டா ஒழிந்த பிறகு அவர்கள் குடும்பம் படித்து வெளியூர் சென்று விட்டார்கள்.

   தனது குல தெய்வமாக கருதி லக்காபுரத்தில் உள்ள இளையபெருமாள் மானியத்தில் இருந்து ஸ்ரீ முக்கண்ணீஸ்வர்ர் சுவாமிக்கு சாயுங்கால பூஜை படித்தரமாக 5மிடா 10வள்ளம் நெல் கொடுத்து வந்தார்கள்.அது எனக்கு நன்கு தெரியும். அது இப்பொழுது படிப்படியாக நின்று விட்டது. நெல்லும் கொடுப்பதில்லை அதன் பிறகு பல நிர்வாகம் பல மாற்றங்கள்.பல அறக்கட்டளை நிர்வாகம் மெரமனைக்காக விடப்பட்ட நிலத்தில் ஆஸ்பத்திரி கட்டி விட்டார்கள்.அதனால் வருமானமும் இல்லை மெரமனையும் நின்று விட்டது. 3 கால பூஜை ஒழுங்காக நடை பெற்று வருகிறது. மாலை நேரம் தீபம் போட்டு வருகிறது.

    தற் சமயம் ஆலயம் பழுதுப்பட்டு மழைக்கு ஒழுகும் நிலையில் உள்ளது. ஆதலால் தற்சமயம் ஸ்ரீ முக்கண்ணீஸ்வரர் ஆலயம் உடனடியாக திருப்பனி கும்பாபிஷேகம் நடக்க வேண்டும். 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அப்போது தான் சுவாமிக்கு சக்தி ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  கொங்குநாட்டு சமுதாயமாக நடந்து வந்திருப்பதால் தங்கள் குடிப்பாட்டு தெய்வமாக கருதி திருப்பணி துவங்கி குடமுழுக்க செய்திட ஈடுபடுமாறு எல்லா  வல்ல இறைவனை கேட்டு கொள்கிறேன்
                                         --நடராஜகுருக்கள்
திரு நடராஜ குருக்கள் (பழைய படம்)


கோவில் படங்கள்:
பாரம்பரிய தொண்மை மாறாமல் அழகுடன் உள்ள ஆலயம். மரம் செடிகளை அகற்றி இடிபாடுகளை மட்டும் சரி செய்து கும்பாபிசேகம் செய்தால் போதுமானதாகும்.

ராகுகேது தோஷம நிவர்தியானால் மண்டபங்கள் கட்டி இதுபோல கிரகணத்தை குறிக்கும் (சூரிய-சந்திரரை பாம்புகள் விழுங்குவது) சிற்பத்தை வெட்டி வைப்பர். ராகுகேது பரிகார தல அடையாளம்.







                                      
          


வரலாற்று குறிப்புகள்
மொளசி குறிப்பு (கொங்கு நாடு-முத்துசாமி கோனார்)
தண்டிகைவேல் கவுண்டர் திருப்பணி (கொங்குநாடு-முத்துசாமி கோனார்)

பெரிய ரங்கைய கவுண்டர் திருப்பணி
(கொங்கு நாட்டு வேளாளர் வரலாறு)

சிவார்ப்பணம்


"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே''

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates