ஆதி அந்துவன் சாத்தந்தை பூச்சந்தை கூட்டத்தவர்களின் ஆதி காணியாச்சி அம்மன் கரூர் நாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டியம்மன். இவ்வூர் பழநாகம்பள்ளி என்று வழங்கப்படுவது அதன் தொன்மையை உணர்த்தும். கொங்கு இருபத்தி நான்கு நாடுகளில் வெங்கால நாட்டைச் சேர்ந்தது நாகம்பள்ளி காணி. நாகம்பள்ளி கவுண்டர்கள் மைசூர் ஆட்சி காலத்தில் கூட மூன்று நாட்டு பிரச்சனையை விசாரித்து பஞ்சாயத்து செய்யுமளவு செல்வாக்குப் பெற்றிருந்துள்ளனர். இங்கிருந்து கொங்கின் பல பகுதிகளுக்கு குடியேறி சென்ற குடியானவர்கள், சென்ற இடங்களில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ்ந்துள்ளனர்.
ஆதி கூட்ட குடியானவர்கள் கீரனூர் சென்று, கீரனூரில் இருந்து ஈரோட்டுக்கும், பின்னர் ஈரோட்டில் இருந்து கோவை வெள்ளக்கிணறு பகுதிக்கும் குடியேறினர். மைசூர் ஆட்சியில் வெள்ளக்கிணறு காணியாளர்கள் கோவையின் ஆட்சியாளர்களாக உயர்ந்தனர். சமீப காலம் வரை பல அரசு அரசியல் அதிகார மையமாக திகழ்ந்தனர். பழையகோட்டை பட்டக்காரர்கள், ஊத்துக்குளி காளிங்கராயர்கள், ஈரோடு ஊத்துக்குளி வண்ணக்கன் கூட்டத்தார் போன்றோர் இவர்கள் வீட்டில் கல்யாண உறவு கொண்டவர்கள். தென்கரை வேனாவுடையார் கோவை நாட்டாமைக் கழக தேர்தலில் வெற்றி பெற வேண்டி தன் வேட்புமனுவை திரும்பப்பெற்றுக் கொண்ட பெருந்தன்மையாளர்கள். கோவை மற்றும் ஈரோடு பகுதியில் ஏராளமான கல்வி மருத்துவ விவசாய பணிகளுக்கு வித்திட்டவர்கள்.
அந்துவன் கூட்ட குடியானவர்கள், பெண் கொடுத்து பெண் எடுத்து சேரனுடன் மண உறவு கொண்டு வாழ்ந்தவர்கள். வஞ்சிவேள் பட்டம் தரித்தவர்கள். கீரனூர் அந்துவன் கூட்டத்தார் இஞ்சிவேள் பட்டம் கொண்டவர்கள். அந்தியூரில் குடியேறிய அந்துவன் கூட்டத்தார் ஆனைகட்டி அந்துவன் குதிரைகட்டி அந்துவன் என்று பேர் பெற்றவர்கள். திருச்செங்கோடு பாலமேடு & மோடமங்களம் அந்துவர்கள் கீழ்க்கரை பூந்துறை நாட்டு நிர்வாக சபை அங்கத்தினர்.
சாத்தந்தை கூட்ட குடியானர்கள் நாகம்பள்ளியில் இருந்து ஈரோடு பகுதிக்கு குடியேறியவர்கள். வெள்ளோட்டில் உலகுடையார் பட்டம் பெற்று வாழ்கிறார்கள். வடகரை நாடு எலவமூலை சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்த லிங்கையன் வெள்ளோடு குடியேறி வாழ்ந்து வந்தவர். பாண்டியர் ஆட்சியில் காளிங்கராயர் பட்டம் பெற்று சிறப்புடன் ஆட்சிசெய்து இன்றளவும் பேர் விளங்குகிறது. பின்னர் ஊத்துக்குளியில் பாளையம் அமைத்து இன்றளவும் வம்சாவளியினர் சீரும் சிறப்புடனும் வாழ்கிறார்கள். வெள்ளோடு பயிரன் கூட்டத்துக்கு அப்புச்சி வீடு நாகம்பள்ளி சாத்தந்தை. வெள்ளோட்டு பயிரன் கூட்டம் முழுதும் அழிந்தபோது மிஞ்சி இருந்த ஒரே மகனைக் கொண்டு அவனுக்கு துணை செய்து மீண்டும் வெள்ளோட்டை மீட்டு கொடுத்தவர்கள் நாகம்பள்ளி சாத்தந்தை கூட்டத்தார்.
பூச்சந்தை கூட்டத்தார் ஈரோடு பகுதிக்கு குடியேறி நசியனூரில் ஆட்சி அதிகாரம் பெற்றவர்கள். பொள்ளாச்சி ஆனைமலையில் சோழர் காலத்தில் பல்லவராயர் பட்டம் பற்று ஆட்சிஸ் செய்தவர்கள். துடுப்பதி காசி விஸ்வநாதர் கோயில் கட்டியவர்கள்.
தன் கோயில் குடிகளை சென்ற இடமெல்லாம் ஆட்சி அதிகாரத்தோடு வாழச் செய்த சக்திமிக்க தெய்வம் பழநாகம்பள்ளி ஸ்ரீ செல்லாண்டியம்மன். கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குலம் விளங்க குடி விளங்க பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment