காளிபட்டி ஆதியில் சேர (கொங்கு) தேசத்தில் கீழக்கரை பூந்துறை நாடு பகுதியில் பருத்திப்பள்ளி இணை நாட்டின் பகுதியாக இருந்தது. (பின்னர் பெண் கொடுத்த வகையில் சீதனமாக மல்லசமுத்திரம் தனி கிளை நாடாக பிரிக்கப்பட்டு, பரஞ்சேர்வழியில் இருந்து ராசிபுரம் வந்த குடியானவர்களான ராசிபுரம் விழியன் கூட்டத்தார் வழி வந்த நல்லணன் உரிமைக்கு வந்தது).
பருத்திபள்ளி செல்லன்கூட்ட கத்தேரி லட்சுமண கவுண்டர் மிகுந்த முருகபக்தி கொண்டவர். அருள்வாக்கு சொல்லி வந்தார். அதோடு காவடியும் காணிக்கைகளும் பழனிக்கு கொண்டு சென்று வந்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், "இனி பழனிக்கு வரத்தேவையில்லை. யாமே காளிபட்டியில் குடிகொண்டுள்ளோம்" என்று உத்தரவு தர, காளிபட்டியில் கோவில் எழுப்பி வழிபாடுகள் நடந்தினர்.
வேண்டுதல்கள் பலிக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவரது வழிவந்தவர்கள் தேர்த்திருவிழாவும் மாட்டுசந்தையும் அப்போதே துவங்கி நடத்தி வந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவு நிலை எடுத்திருந்த பட்டக்காரர்கள் ஐரோப்பா சென்று கல்வி பெற்றனர். அந்த காலத்திலேயே பல்லாயிரம் ரூபாய்கள் வருவாய் கொண்டதாக இந்த கோயில் இருந்துள்ளது. ஆனால் கோயில் வருமானத்தில் குளறுபடிகள் அரங்கேறவே கோர்ட் வழக்கு நடந்து மிகுந்த அவமானமடைந்ததை முத்துசாமி கோனார் "கொங்குநாடு" நூலில் குறிப்பிடுகிறார்.
காளிபட்டி தேரும், மாட்டு சந்தையும் இன்றளவும் பிரசித்தம். திருவிழாவில் விற்கப்படும் மிட்டாய்கள் கூட மிக பிரசித்தம்.
திருவிழா நிகழ்ச்சிகளில் திருட்டு குற்றங்கள் அரங்கேறின. இதை தடுக்கவே, விட்டம்பளையம் ஜமீனான ஹானரரி ஜட்ஜ் சாமர வேலப்ப கவுண்டர் காளிபட்டி தேர் திருவிழாவுக்கு என்று கோர்ட் அங்கு வர உதவி செய்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த நீதி வழங்கும் முறை, தற்போதும் கடைப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, தவறு செய்பவர்களை கைது செய்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதற்காகவே நடமாடும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அது முதலே திருவிழா சமயத்தில் கிராமத்தை நோக்கி நீதிமன்றமே வந்த கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகினறனர்.
No comments:
Post a Comment