Trending

Thursday 3 September 2015

மரபு அருளும் ஆரோக்கியம்-வீடியோ பதிவுடன்

நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வைட்டமின், புரோட்டின் என ஒரு பத்து பதினைந்து பெயர்களில் அடக்கி விடுகிறார்கள். இந்த சில ஊட்டச்சத்துக்களை மட்டும் பெற்றாலே நாம் நோயின்றி வாழலாம் என்ற பிரம்மையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நிஜத்தில் நம் உடல் இயக்கத்திற்கு ஏராளமான மூலக்கூறுகள் தேவை. என்சைம்கள் என்று சொல்லலாம். உதாரணமாக, நவீன அறிவியல் பார்வையில் தேனை சோதனை செய்தால் அதில் 93% சர்க்கரை மீதி நீர், மற்றும் சில கனிமங்கள் மட்டுமே தெரியும். ஆனால் உண்மையில் தேன் அமிர்தத்துக்கு ஒப்பான பல ஆயிரம் என்சைம்களை உடையது; அவற்றை இந்த நவீன அறிவியலால் கண்டறிய இயலவில்லை.

சரியான வாழ்க்கைமுறை (உணவு, தூக்கம், அன்றாட சரியான வேலை, மன அழுத்தமின்மை, மாசில்லா சூழல்), உணவு உட்கொள்ளும் முறை இருந்தால் வெறும் எளிய உணவுகளின் மூலமே நம் உடல் அதற்குத் தேவையான குறைந்தபட்ச என்சைம்களை உற்பத்தி செய்துகொள்ள இயலும். காரணம் நம் வயிற்றில் பல ஆயிரம் வகையான ஜீரணதிரவங்கள் சுரந்து தனக்குத் தேவையான என்சைம்களை தானே உற்பத்தி செய்துகொள்கின்றன. நவீன அறிவியல் அந்த என்சைம்களில் சில நூறுகளை மட்டுமே இதுவரை கண்டறிந்துள்ளது.

இப்படிப்பட்ட மிக அரிய என்சைம்களையும் நுண்நூட்டச்சத்துக்களையும் நாட்டு வகை/மரபு பழங்கள், செடிகள், மரங்கள், காய்கறிகள் இயற்கையாகவே தன்னுள் வைத்திருந்து கொடுக்கின்றன. நாட்டு வகை/மரபு - என்பது எந்த மண்ணில், எந்த சூழல், சீதோஷ்ண நிலையில், நாமும் நம் முன்னோர்களும் தொன்றுதொட்டு வாழ்கிறோமா அந்த மண். நமக்கு கொங்கதேசம்.நம் மண்ணில் தான் நமக்கேற்றது விளையும்.

இந்த நவீன அறிவியல் மற்றும் நவீன விவசாயம் வந்தபின்னர், நம் கொங்கதேசத்தின் பல நூறு மரங்கள், காய்கனிகள் தங்களது முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. ஆனால், இந்த உயிர்ச்சூழல் தான் நம் முன்னோர்கள் நோயின்றி நலமாக வாழ வழிவகை செய்தது. பனை, இலந்தை, தேங்காய், நவாப்பழ மரம், வில்வம், சீத்தாப்பழம், கோணப்புளியங்காய், கோவை, வாதனா மரம், இலுப்பை, வன்னி, அரப்பு, ஆவாரம்பூடு, கொழுக்கட்டை புல், வேலா மரம், புங்கன், அத்தி போன்றவை அந்த வரிசையில் சில. மா, வாழை, மாதுளை, அரிசி, கம்பு, வெண்டை, முருங்கை, மீன், ஆடு, கோழி, பசு போன்ற பல காய்கறிகள், மரங்கள், உயிரினங்களில் மற்றும் மூலிகைகளில் மரபணு மாற்றம், வெளிநாட்டுரகங்கள் மற்றும் ஒட்டுரகம் வந்துள்ளன. இவை நமக்கு தேவையானது இல்லாமலும், கெடுதல் செய்யக்கூடியதாகவும் உள்ளன.


நாம் மறந்த, இழந்த மரங்கள், காய்கறிகள், உயிரினங்களை மீட்டு கொண்டுவருவது மீண்டும் நம் கிராமங்களை உயிர்பிக்க அத்யாவசியமான தேவையாகிறது. ஆல், அரசு, இச்சி, அத்தி, வேம்பு, வில்வம் போன்றவை பல நோய்களுக்குத் தீர்வளிக்கும் மூலிகைகளாக மட்டுமின்றி மழையை ஈர்த்துத் தரும் அரிய பணியையும் செய்கின்றன. இன்று மரம் நடுகிறேன் பேர்வழி என்று வெளிநாட்டு மரங்களை கொண்டுவந்து நம் உயிர்சூழலை கெடுக்காமல் நம் மண்ணின் மரங்கள், பயிர்கள், உயிர்களை அறிந்து அவற்றை வளர்த்தெடுப்போம்.









2 comments:

  1. ஆச்சாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது.
    ஆச்சரமாக இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம்.

    கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?” என்று கேட்கிறார்கள்.

    டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆச்சாரமாக இருப்பதும். ஆச்சாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும்.

    ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார், தன் மடியான வெள்ளி டம்பிளரில் !

    சாலையோர பரோட்டா கடைகளில் போலீஸ்காரர்கள் சாப்பிடுவதைப் பார்க்கலாம். உடனே ஆகார நியமம், அர்த்தபஞ்சகம் போன்றவற்றை சொல்லப் போகிறேன் என மிரட்சி அடைய வேண்டாம். இன்று கோயில் அர்ச்சகர் முதல் போலீஸ் ஏட்டு வரை பலரும் தொப்பையும் தொந்தியுமாக இருப்பதற்குக் காரணம் இதுவே. கண்ட இடங்களில் கண்ட குப்பைகளைச் சாப்பிடுவதால் தான்.

    அர்ச்சகருக்கு யூனிப்பார்ம் திருமண், பஞ்சகச்சம், காவல் துறையினருக்கு காக்கி. இவர்கள் இந்தச் சீருடையில் இருந்தால் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டுத் தவறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம். நெறிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் ”நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்ற உணர்வு ஏற்படுகிறது.

    வீட்டில் மின்விசிறி மீது அழுக்கு படிந்தவுடன் அது சுற்றும் வேகம் குறைந்துவிடும். துடைத்தவுடன் வேகமாகச் சுற்றிவதை கவனித்திருக்கலாம். இல்லை என்றால் அடுத்த முறை கவனித்துவிடுங்கள். அதே போல் அழுக்கு படிந்த டியூப் லைட்டை ஈரத் துணியால் துடைத்தவுடன் அதிக பிரகாசமாக ஒளிவீசும். ஒழுங்காக மெயின்டெயின் செய்யவில்லை என்றால் பிரச்சனை தான். பிறகு பெரிசாக செலவு வைக்கும்.

    நம் உடலும் அதே போல் தான். சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் பல உபாதைகள் வந்து, பல மருத்துவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு வரவு வைப்போம். இதை லைப் ஸ்டைல் பிரச்சனை என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிறோம்.

    ஆச்சாரமாக இருந்தாலே பல குப்பைகளை நாம் தேடி செல்ல மாட்டோம் என்பது தான் உண்மை. எல்லா உடல் உபாதைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். எனக்குத் தெரிந்த உதாரணங்கள் சிலவற்றை சொல்லுகிறேன்.

    பெரிய ஹோட்டல் தான். ’செவ்ரலேயும், சிட்டியும்’ பார்க்கிங் இல்லாமல் தவித்துக்கொண்டு மக்கள் சாதாரண பாவ் பாஜிக்கு நூறு ரூபாய், எக்ஸ்டரா பாவுக்கு எக்ஸ்டரா கொடுக்கும் இடம். அங்கே பார்த்த காட்சி இது - கொத்த மல்லி கட்டின் இடுப்பில் கட்டிய பகுதியை வெட்டித் தள்ளிவிட்டு இலைகளைப் பொடிசாக நறுக்கிக் தள்ளினார். என்ன திறமை என்று எண்ணினேன். வெட்டியதை அப்படியே ஒருவர் அள்ளிக்கொண்டு பாவ் பாஜி, ஜீரா ரைஸ் என்று எல்லா பண்டங்கள் மீதும் தூவி கொடுத்தார். இதில் என்ன தப்பு என்று குழம்ப வேண்டாம். அவர் கொத்தமல்லி கட்டை அலம்பவே இல்லை!. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு, டெம்போவில் புகை, அழுக்கை உள்வாங்கிக்கொண்டு - நம் பண்டங்கள் மீது தெளிப்பது வெறும் அழுக்கும் பூச்சிக்கொல்லியும் தான்.

    நான்வெஜ் சேர்ந்து சமைக்கும் மல்டி-குசைன் உணவகளுக்கு சமீபகாலமாகச் செல்வதில்லை. ஒன்று நான் சைவம் அதனால். இன்னொன்று சுத்தம் இங்கே சுத்தமாக இருப்பதே இல்லை. அதனால் தான் கிச்சனுக்கு வெளியே ”அனுமதி இல்லை” என்ற போர்ட் இருக்கும். மாமிசம் சமைக்கும் இடங்களில் அதன் கழிவுகளையும் சரியாக அகற்றாமல்...நாற்றமும் அழுக்கின் உறைவிடமாகத் திகழ்கிறது.

    ReplyDelete
  2. ஈக்கள் இல்லாத கோழிப்பண்ணைகளோ, ஈ மொய்க்காத மீன் கடையோ பார்க்க முடியாது. இங்கிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சனை.

    ஹோட்டல்களில் சர்வர்கள் பெரும்பாலும் டாய்லெட் சென்றுவிட்டு கைகளை சுத்தமாகக் கழுவுவது இல்லை. அதே கையை டம்பிளர் தண்ணீரில் விட்டுக்கொண்டு இலையை அலம்பிக்கொள்ளுங்கள்’ என்பார்கள்!.

    ஃபேஸ்புக், டிவிட்டர் தலைமுறைக்கு மெக்டொனால்ட், டாமினோஸ் சுத்தமாகக் கொடுக்கும் எந்த உணவும் உடலுக்கு நல்லதில்லை. அவற்றுடன் குடிக்கும் கோக், பெப்சி எல்லாம் டாஸ்மாக்கிற்கு சமம். சதாம் காலத்திய ரசாயன ஆயுதங்களைவிட இது கொடியது. அமெரிக்கா நமக்கு இழைத்துக்கொண்டு இருக்கும் மிகப்பெரிய தீங்கு இது.

    மேக்கப் சமாசாரங்கள் விற்க வேண்டும் என்று இந்தியாவிற்கு ‘மிஸ் இந்தியா’ கொடுத்துச் செய்த சூழ்ச்சி போல தான் கேக், பேக்கரி ஐட்டம் விற்கப் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள். முன்பு எல்லாம் பிறந்த நாளைக் கோயிலுக்கு சென்று கொண்டாடுவோம் இன்று அப்படி இல்லை. கேக், பேக்கரி ஐட்டங்கள் எல்லாம் sweet poison! இவற்றை நம் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துக்கொண்டு வந்தால் இன்னும் ஐந்து வருடத்தில் அவர்களுக்கு ஒபிசிட்டியுடன் டயபட்டீஸும் நிச்சயம்.

    ஆச்சாரமாக இருப்பவர்கள் லோக்கல் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள் உதாரணம் உருளை, கோஸ்... இன்று பெருமாளுக்கே ஸ்டிக்கர் ஒட்டிய பழங்கள் தான்!. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தான் இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். உதாரணம் கோதுமை.

    ஆச்சாரமாக இருப்பவர்கள் பிளாஸ்டிக் கப்பில் காபி, டீ, பிளாஸ்டிக் கவரில் பால், தயிர் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். பிளாஸ்டிகில் அடைத்து ஷெல்ப் லைப்பை கூட்ட வேண்டும் என்றால் அதற்குச் செயற்கையாக பிராசஸ் செய்ய வேண்டும். ஃபிரிட்ஜ் போன்ற குளிர் ஊட்டப்பட்ட இடத்தில் அதை பாதுகாக்க வேண்டும். இல்லை கெட்டுவிடும். இன்று எந்த எண்ணையும் சிக்கு நாற்றம் அடிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம். மரணம் அடைந்துவிட்டால் அமெரிக்காவிலிருந்து பையன்/பெண் வரும் வரை நம் உடலைப் பாதுகாப்பது போலத் தான் இதுவும். சென்னையில் இருந்த போது ஃபிரிட்ஜ் இல்லாமல் பழகிக்கொண்டேன் கஷ்டமாகத் தெரியவில்லை.

    ஆச்சாரமாக இருப்பவர்கள் ஆற்றில் ஓடும் தண்ணீர், கிணற்றுத் தண்ணீர் தான் உபயோகிப்பார்கள். ஆனால் இன்று நான் சாப்பிடும் தண்ணீர் பல வடிவங்களில் இருக்கும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு தான் வருகிறது. பிஸ்லேரி போன்ற நிறுவனங்கள் சுத்தமான தண்ணீர் என்று கொடுப்பது எல்லாம் சுத்தமான தண்ணீரே இல்லை. இன்று நாம் நம் நதிகளை அழித்துவிட்டு பாட்டில் தண்ணீருக்கு அலைந்துகொண்டு இருக்கிறோம். பிளாஸ்டிக் என்பது நச்சு பொருள் அதில் வரும் தண்ணீர் ?

    ஆச்சாரமாக இருப்பவர்கள் ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் இருப்பார்கள். உபவாசம் இருந்தால் உடலுக்கு நல்லது. உடல் புத்துணர்ச்சி அடையும் நீண்ட நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழலாம்.

    உட்கார்ந்துகொண்டு நாளிதழ் படிக்க வசதியாக
    இன்று எல்லா இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் தான். காலை மடக்கி இந்தியன் டாயலெட்டில் அசைவுகள் இல்லாமல் பாலன்சுடன் அமர வாக்கிங் ஸ்டிக் போன்ற ஒன்று பல இளைஞர்களுக்கு இன்று தேவைப்படும். நாம் உட்காரும் பகுதி நம் பின்னந்தொடையை தொட்டுக் கொண்டு இருக்கும். பின்னந்தொடையை சுத்தமே செய்வதில்லை.

    ஹார்பிக் பொன்றவை போட்டு சுத்தம் செய்தாலே டாய்லெட்டில் இரண்டொரு கிருமி இருக்கும் என்று விளம்பரங்களில் பார்த்திருக்கிறோம். சுத்தம் செய்யாத நம் பின்னந்தொடையில் எவ்வளவு கிருமிகளோ ? ஆச்சாரமாக இருப்பவர்கள் வெஸ்டர்ன் யூஸ் செய்ய மாட்டார்கள்.

    ஆச்சாரமாக இருப்பவர்கள் டிவி, சினிமா பார்க்க மாட்டார்கள். டிவி, சினிமா பார்த்தால் கண்ணைவிட மனம் கெட்டுவிடும். வேண்டாத எண்ணங்கள் வரும். ராத்திரி சரியா தூக்கம் வராது.
    உங்களுக்கு ஞானம் கிடைக்காமல் “The Nation Wants To Know” போன்ற கேள்விகள் தான் விடையாகக் கிடைக்கும். குவாலிடி தூக்கம் போய்விடும். சரியான தூக்கத்தின் போது தான் நான் உடலில் பல பாகங்கள் ரிப்பேர் ஆகிறது. சரியாகத் தூக்கம் வரவில்லை எல்லாப் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுக்கும்.

    நாம் சாப்பிடும் எல்லா உணவுகளையும் பெருமாளுக்கு கண்டருளப் செய்துவிட்டு சாப்பிட வேண்டும் இல்லை என்றால் பாவம் என்று கீதையில் சொல்லியிருக்கிறது. பாவ புண்ணியம் ஒரு பக்க இருக்க நாம் பெருமாளுக்கு சமர்பிக்கும் உணவு என்பதால் அதை சுத்தமாக செய்வோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அட்லீஸ்ட் குளித்துவிட்டு செய்வோம், செய்யும் போது நக்கி பார்க்க மாட்டோம்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates