Trending

Monday 24 November 2014

கற்பின் மகத்துவம்

நம் வேதசாஸ்திரங்கள், முன்னோர்கள் மற்றும் ஞானியர், ஆண்களுக்கு பல நியமங்களையும் கடமைகளையும் விதித்துள்ளனர். அவை,

“மாத்ரு தேவோ பவ: பிதுர் தேவோ பவ:
ஆச்சார்யா தேவோ பவ: அதிதி தேவோ பவ:”

தாய், தந்தை, குரு, நம்மை நாடி வந்த விருந்தினர் போன்றோர் தெய்வங்களுக்கு ஒப்பாவர். அவர்களை காப்பது ஆணின தர்மமாகும். அதேபோல, பூதக்கடன், முனிக்கடன், பித்ருக்கடன், தேவக்கடன் என செய்யவேண்டிய கடமைகளும் ஏராளம். பிரம்மச்சாரி, சம்சாரி, வனப்ரஸ்தன், சந்நியாசி என ஒவ்வொரு நிலையிலும் பொறுப்புகள் உண்டு.  ஒருவன் நற்கதியடைய இந்த  கடமைகளும் நியமங்களும் தவறாது வாழ்வது அவசியமாகும். ஆனால், பெண்களுக்கோ சொல்லப்பட்டது ஒன்றே ஒன்றுதான்.

“பதி தேவோ பவ”

பெண்ணுக்கு கணவன் மட்டுமே தெய்வம் எனவும், பதியின் சேவை மட்டுமே நியமம் கடமை எனவும் சொல்லப்படுகிறது. வேறு தெய்வங்களோ கடமையோ பெண்ணுக்கு கிடையாது. எல்லா கடமைகளையும் சரிவர செய்த ஆணைவிட தனது ஒரு கடமையை சரியாக செய்யும் பெண் உயர்ந்தவள். ஆணைவிட என்பதைவிட, ஒரு கற்பரசி, சித்தர்களையும், தேவர்களையும் தெய்வங்களையும் விட சக்திவாய்ந்த தெய்வமாக வணங்கப்படுவார். மகாலக்ஷ்மியே தினந்தோறும் தனது கணவருக்கு பாதங்கள் பிடித்துவிட்டு பதிசேவை செய்துவருகிறார் என்பதன் மூலம் பதிசேவையின் மகத்துவத்தை உணரலாம். தினமும் உறங்கப் போகும்முன் பக்திப்பூர்வமாக உள்ளன்போடு பதிக்கு பாத சேவையும், விழித்து எழும்போது பாத நமஸ்காரமும் செய்யும் பெண் அளவிலா சக்தி பெறுவாள். தெய்வங்களும் அப்பேற்பட்ட பெண்ணின் சக்திக்கு தலைவணங்கும். அந்த பெண் உள்ள குடும்பத்தின் அனைத்து வித கிரக தோஷங்களும், பரம்பரை சாபங்களும், கர்ம வினைகளும், சிறிது சிறிதாக கரைந்து குடும்பம் லக்ஷ்மி கடாட்சத்தோடு, செழித்து வளரும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் சத்தியமான உண்மை. அதனாலேயே நம் முன்னோர்கள் அன்றாடம் தன் கணவருக்கு பாதசெவை, பாத நமஸ்காரம், மாங்கல்ய நமஸ்காரம் என்பதை ஒரு நாளின் முதல் வேலையாகவும், கடைசி வேலையாகவும் வைத்திருந்தனர்.



ஒரு பத்தினியின் கோபத்துக்கு தெய்வங்களும் நடுங்கும். வள்ளுவரும் கூட இதையே பின்வருமாறு கூறுகிறார்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்
பொருள்: கற்பு என்னும் வலிமை இருந்தால் பெண்ணைவிட பெரிய சக்தி எது?

உதாரண நிகழ்ச்சிகள்:

அனுசுயா:கற்பின் வலிமையால் சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கியவர். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என தேவியர் மூவராலும் வணங்கப்பட்டவர்! இவரின் பதிபக்தியின் பொருட்டு கங்கையே உலகின் பஞ்சத்தை தீர்த்த வரலாறு உண்டு.



சாவித்ரி: கணவன் சத்யவானின் மேல் கொண்ட பக்தியை மெச்சி எமதர்மராஜா, பல முறை வரம் கொடுத்தார். அதையும் சாதுர்யமாக கொண்டு கணவன் உயிரை மீட்டவர்.



சந்திரமதி: சத்யசீலர் ஸ்ரீ ஹரிச்சந்திர மகாராஜாவின் பத்தினி. எவ்வளவோ இன்னல்களுக்கு இடையேயும் கடைசி வரை கற்புநெறி பிறழாது வாழ்ந்தவர். இவர் தாலி கணவரான ஹரிச்சந்திர மகாராஜாவுக்கு மட்டுமே தெரியும்.

ஸ்ரீ சீதா மாதா: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் தர்ம பத்தினி, கற்பின் வலிமையால் ஆஞ்சநேயருக்கு சிரஞ்சீவி வரமளித்தவர்.



நளாயினி: இவரின் கற்பின் சக்திக்கும், ஆணைக்கும் சூரிய தேவனே கட்டுப்பட்டு உதிக்காமல் நின்றார்!

கண்ணகி: கற்பின் வலிமையால் மதுரையை எரித்தவர்.

தாமரை நாச்சியார்: குன்னுடையா கவுண்டரின் தர்ம பத்தினி தாமரை நாச்சியார். குன்னுடையா கவுண்டர் சந்தித்த ஏராளமான இன்னல்களை இவரது கற்பின் சக்தியால் கரைத்தார். 



வெள்ளையம்மா: காங்கயநாடு முழுக்காதன்குலத்தாய் வெள்ளையம்மா, கற்புநெறி பிறழாமையால், தனது கணவன் மரணத்தின் பின்னர் வந்த சூது வென்று நாடமைத்து பெருவாழ்வு வாழ்ந்தார். இன்றளவும், அவரின் வம்சாவழியினர் காங்கயம் பகுதி பட்டக்காரராக வாழ்ந்து வருகிறார்கள்.



தனது பார்வையாலேயே கொக்கை எரித்த கொங்கணசித்தரின் கோபப்பார்வை கற்பரசி   ஒருவர் முன் பலிக்கவில்லை. அந்த புண்ணியவதி சித்தரை நோக்கி “கொக்கேன்றா நினைத்தாய் கொங்கணவா?” என்று கேட்டார். அத்தாயின் அடிபணிந்து சக்தியின் காரணம் கேட்ட சித்தருக்கு, கணவனை தெய்வமாக பூசிக்கும் பெண்ணுக்கு சர்வ வல்லமையும் உண்டாகும் அதுவே என் சக்திக்கும் காரணமாகும் என்றார். இன்னும் ஏராளமான சம்பவங்கள் கற்பின் மகத்துவத்தை உணர்த்தும். சேரதேசமாகிய கொங்கதேசம் கற்புநெறி வாழ்ந்த பெண்களுக்கு புகழ் பெற்றது. கணவன்மேல் கொண்ட பற்றால் சுயவிருப்பத்தின் பேரில் உடன்கட்டை ஏறியோர் கணக்கில் அடங்கார். வீரமாத்தி, தீப்பாய்ந்தம்மன், புடவைகாரியம்மன் என்னும் பேரில் உள்ள தெய்வங்கள் இவ்வகையே.



பகவத் கீதை சொல்லும் செய்தி:

குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸநாதநா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா:

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும

குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது. அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள். வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன. ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.

தொல்காப்பியம்:
தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியம் நூல் கற்பிற்கு தரும் விளக்கம், ஆண்-பெண் இருவீட்டாரும் சம்மதித்து சீர்மரபுகளோடு முறைப்படி நடத்தப்படும் கல்யாணம் முடித்து வாழும் ஒழுக்கமான இல்லற வாழ்வே கற்பு என்கிறது.

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே'

எனவே, காதல் கன்றாவி எல்லாம் முன்னோர் பின்பற்றவில்லை. சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் முன்னோர் வாழ்ந்தகாலத்தில், காதல் இருந்தது; அது நம் மரபு, என்பது கேலிக்கூத்து. சிலப்பதிகாரத்தில் கண்ணகி திருமணத்தின்போது அவரின் வயது   பன்னிரண்டு என்பதை நினைவில் கொள்ளவும்!. திராவிட-முற்போக்கு-கம்யுனிஸவாதிகள் தங்கள் விஷ சித்தாந்தத்தை பரப்ப குடும்பங்கள் அழிந்தாலும் பெண்கள் கெட்டாலும் பொருட்படுத்தாது காதலெனும் பேரால் முறையற்ற கல்யாணங்களை வளர்த்தும், கற்பு நெறியை தூஷித்தும் பரப்புரை செய்கிறார்கள். இவர்கள் சொல்லும் வாழ்க்கை முறையில் வாழும் அமெரிக்க குடும்பங்களும், நாட்டின் பொருளாதாரமும் தெருவில் நிற்கின்றன என்பது உலகம் அறிந்த உண்மை!



நாட்டு பசுவின் பால் பொருட்கள்,பருவத்தில் திருமணம்,சரியான உணவுப்பழக்கம், பண்பாட்டு ஒழுக்கக்கல்வி, வரலாறு அறிதல் இறையருள் போன்றவை, கற்புநெறிப்படி வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாம். பாக்கியம் வேண்டும்!

பெண்களை தெய்வமாக வணங்கும் பாரத - கொங்கதேச பாரம்பரியம் போற்றுவோம். கற்பொழுக்கத்தின் மகத்துவம் அறிந்து மரபுநெறி நீங்காது வாழ்வோம்!

யத்ர நார்ய: து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
(எங்கு பெண்கள் வணங்கப்படுகிறார்களோ அங்கு இறைவன் உறைகிறான்)

-- திருமதி.பாவாத்தாள் கவுண்ட்சி


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates