Trending

Thursday 6 November 2014

நிலங்களின் பூர்வீகம்

நிலங்கள் வாங்கும்போது ஏராளமான விஷயங்களை பார்க்கிறோம். ஆனால் அந்த நிலம் நம் குடும்பத்துக்கு நல்லது செய்யுமா, காலாகாலத்துக்கும் நிலைக்குமா என்பதை பார்ப்பதில்லை. சில நிலங்கள் வாங்கியபின்னர், அந்த குடும்பத்தில் தொடர்ந்து கெட்ட சம்பவங்கள் நடக்கும். அது உடனே தெரியாவிட்டாலும், ஒன்றிரண்டு தலைமுறைகளில் தொடர் மரணம், வாரிசுகள் வேறு சாதியோடு ஓடிப்போய் கல்யாணம் செய்வது,  பெண்கள் ஒழுக்கம் தவறுவது,கல்யாணமாகாமல் வம்சம் அழிவது, கல்யாணமானவர்கள் குழந்தைகளின்றி போவது, தொடர்ந்து நஷ்டங்கள் அவமானங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும்.


காரணம், அந்த நிலத்தின் வரலாற்றை அறியாது வாங்குவதுதான். நம் முன்னோர்கள் கோயில்களுக்கும், குளங்களுக்கும், கோசாலை பசுக்களுக்கும் அவற்றின் மேய்ச்சலுக்கும், பூஜைக்கான பூக்களுக்கு நந்தவனங்களுக்கும், அக்னிஹோத்ரம் போன்ற காரியங்களை செய்யும் பிராமணர்களுக்கும், ஆன்மீக மடங்களுக்கும் பல நிலங்களை மானியமாக விட்டிருந்தனர். விடுதலைக்கு பின் திராவிட ஆட்சி, முற்போக்குவாதிகள் தலைவிரித்தாட துவங்கியபின்னர் இதுபோன்ற தர்ம மானிய நிலங்கள் சூறையாடப்பட்டன. ரியல் எஸ்டேட் அரக்கர்கள், பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் கைக்கூலிகள் போன்றோரால் அவை பட்டா செய்யப்பட்டு வணிகமாக்கப்பட்டன. குளங்கள் சிறிது சிறிதாக மண்கொட்டி மூடப்பட்டன. இன்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் சொத்துக்கள் வந்த பின்னர், ஏராளமான கோயில்-பொது சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. கோசாலைகளின் பயன்பாட்டிற்கு மானியம் விடப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் கலவாடப்பட்டதால் ஏராளமான கோயில்களில் பசுக்கள் செத்துக் கொண்டிருக்கின்றன. பல்வேறு கோயில்களில் அறநிலையத்துறை பசுக்களை கண்டவர்களுக்கு கொடுப்பதால் அவை வெட்டுக்கு செல்கின்றன. குளங்கள், ஏரிகள் நிலங்கள் களவாடப்பட்டதால் இன்று மழை பெய்தாலும் அந்த நீர் சேமிக்க  வசதியின்றி வறட்சி சீக்கிரத்தில் வருகின்றது. இதனால் எத்தனையோ விவசாய பூமிகளும், அதை நம்பி வாழும் பசுக்கள், விவசாயிகள் வாழ வழியின்றி சாகிறார்கள். அவர்கள் வாரிசுகள் கிராமத்தை துறந்து அதர்மமே அடிப்படையாகவுள்ள நகரத்தை நாட வேண்டியுள்ளது. எதற்காக அந்த நிலங்கள் கொடையளிக்கப்பட்டதோ அதைவிடுத்து அரசு காரியங்கள், சுயநலவாதிகள் நோக்கங்கள் என்று களவாடப்பட்டு வருவதை தன்னார்வ அமைப்புக்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. 

அவினாசி அருகே ஏரி நிலத்தை ரியல் எஸ்டேட் செய்த கொடூரர்கள் 


மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.யார். அவரது ஆட்சி காலத்தில் ஏராளமான கோயில் நிலங்களை அரசு மற்றும் பிற பயன்பாட்டுக்கு கொடுத்துள்ளார். உதாரணம் நாமக்கல் உஞ்சனை காளியம்மன் கோயில் நிலங்கள். இன்றுவரை அரசியல்வாதிகள் ஊரான் வீட்டு நெய்யே என்று எடுத்து தானம் செய்வது போல பாசாங்கு செய்து தங்களுக்கு சேர்த்துக் கொள்வதும் இதுபோலத்தான்.

இதுபோன்ற சொத்துக்க்களை-நிலங்களை வாங்குவோருக்கும் தவறாக பயன்படுத்துவோருக்கும் நிச்சயம் தண்டனை உண்டு. உதாரணமாக, கோயில்களைக் காவல் காக்க கறுப்பு சக்திகள் பிரதிஷ்டை செய்யப்படும். கோயில்களின் எல்லா மூலையிலும் சிறிய பீடங்கள் போன்ற அமைப்பை எல்லாரும் பார்த்திருப்போம். அவை சிவகணங்கள்-பூதங்கள் என்று சொல்லுவார்கள் (சஷ்டி கவசத்தில் சொல்லுவார்களே, கண பூசை கொள்ளும் காளியோடனைவரும் என்று..). கருப்பராயன், முனியப்பன் போன்ற பல கடவுலகுள் ஏரி அணை குளம் குட்டைகளின் கரையில் பிரதிஷ்டை செய்திருப்பதை நாம் இன்றும் பார்க்கிறோம்.

புகழ் பெற்ற மேட்டூர் அணை முனியப்பன், நிஜத்தில் அங்கிருந்த ஏரி காக்க நிறுவப்பட்டது. அந்த ஏரியை மூட நினைத்தபோது ஆங்கிலய என்ஜிநீர் கனவில் தோன்றி மிரட்டியத்தில் மிரண்டு போனான் வெள்ளைக்காரன். பிறகு முனியப்பன் உத்தரவுப்படி, கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல குளம், ஏரி, அணை, கண்மாய் போன்றவற்றை தங்கள் உடல், பொருள், உழைப்பு ஏன் உயிரையும் கொடுத்து வெட்டியவை. நரபலிகள் கொடுத்து கறுப்பு சக்திகள் பிரதிஷ்டை செய்து அவற்றை காவலுக்கு வைப்பார்கள். தெய்வ சக்திகள், கோயிலுக்கு மானியம் விட்ட தர்மாத்மாக்கள், மற்றும் அவற்றை காவல் செய்யும் சக்திகள் ஆகிய அனைவருடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் இந்த நிலங்களை வாங்குவோர், அபகரிப்போர், ஆட்படுவார்கள். தண்டனைகள் தாமதமாகலாமே தவிர தவறாது. இதை கண்கூடாக ஏராளமானோர் வாழ்க்கையில் நீங்கள் பார்த்திருக்கலாம், அற நூல்களிலும் படித்திருக்கலாம். பல மானியங்கள் விட்டபோது முன்னோர்கள் சத்யம் செய்து கூறிய வாக்குகள் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம். அவை பின்வருமாறு,

""இந்த தருமத்தை யாதாமொருவர் தப்பிதம் பிழை செய்தாலும், மறுத்தாலும், அவர்கள் கெங்கைக் கரையிலே காராம்பசுவையும், காசிபிராமணரையும், தாய் தந்தையரையும், சிசுவையும் கொன்ன  பாவ தோஷத்திலே போவார்கள்""""

ஒரு உதாரணம்:


இன்றளவும்கூட கிராமங்களில், கோயக்காடு, பாப்பாங்காடு, அய்யங்காடு, சாமிகாடு, மானுவக்காடு, நந்தவனத்தோட்டம், அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம்  போன்ற பேர்களில் இந்த நிலங்கள் இருப்பதை காணலாம். 

எனவே, நிலங்கள் வாங்கும் முன் நூறு வருஷத்து வில்லங்கம் போட்டுப்பார்த்து நிலத்தின் பூர்வாங்கத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு வாங்கவும். தற்போது அறியாமல் இதுபோன்ற நிலங்களை வாங்கியோர் , வாங்கிவிட்டு உளமார வருந்தி திருத்திக் கொள்ள நினைப்போர் அதற்கு என்ன செய்வது என்று உங்கள் குலகுரு, ஆன்மீகப்பெரியோரை கலந்தாலோசித்து செய்யவும். பெரும்பாலும், எந்த தர்மத்திற்காக அந்த நிலம் விடப்பட்டதோ அது தொடர்ந்து நடக்க ஆவண செய்தல், யாருக்கு அந்த நிலம் விடப்பட்டதோ அவர்களுக்கு மாற்று நிலம் (அ) வருமானம் என்று இருக்கும் (இந்த பரிகாரங்களை நாமே முடிவு செய்யக்கூடாது). பொது தர்ம நிலங்களை அபகரிக்கும் கயவர்களிடம் இருந்து மீட்க முதலில் அந்த இடத்தை காக்கும் தெய்வ சக்தியை தூண்டும்விதமாக பூஜையும் பலியும் கொடுத்து உங்கள் முயற்சியை துவங்குங்கள். உங்கள் காரியம் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும்.


-கொங்கதேசம் தலைய நாடு கன்னிவாடியில் வெள்ளாள கன்னர்களில் ஸ்ரீமான் மும்முடி நல்லதம்பி மன்றாடியார் 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates