திருச்செங்கோடு கோவில் திருப்பணி:
கொங்கு தேச சிற்பகலைக்கு மணி மகுடமாகவும், கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்றும் ஆன திருச்செங்கோட்டு மலையின் சிற்பக்கலை மேன்மைக்கு காரணம் குறித்து ஒரு வரலாற்று சம்பவம் உண்டு.
திருசெங்கோட்டு கோவில் திருப்பணிக்கு சிறந்த சிற்பிகளை வரழைக்க அன்றைய திருச்செங்கோட்டு பகுதியின் (கீழக்கரை பூந்துறை நாடு) பட்டக்காரர் கன்ன கூட்ட அத்தப்ப நல்லதம்பி காங்கேயர் மதுரை சென்றார். நாற்பது சிற்பிகளின் தலைவனை பார்த்து கோவில் திருப்பணிக்கு வருமாறு அழைக்க- அவர் பட்டக்காரர் சரியாக தம் சிற்பிகளை பராமரிப்பாரா?-இவரை நம்பி பாண்டிய தேசம் கடந்து செல்லலாமா? என்று சந்தேகித்தார்.
எனவே, பட்டகாரரிடம் "காங்கேயரே, தற்போது மழைக்காலம் தொடங்கவிருக்கிறது. மழைக்காலம் முடிந்ததும் நாங்கள் வருகிறோம். தற்போது எங்களுக்கு அடுப்பெரிக்க விறகு ஏற்ப்பாடு செய்து தரவும்" என்று, இவரால் மூன்று மாத விறகு கொடுக்க முடிகிறதா பார்ப்போம் என்று சோதனை செய்ய எண்ணினார்.
மழைக்காலம் முழுவதுமான மூன்று மாதத்திற்கும் சேர்த்து நாற்பது குடும்பங்களுக்கு எவ்வளவு விறகு தேவை என உத்தேசித்து அவ்வளவையும் சந்தன மரங்களாக வாங்கி சிற்பிகள் வீட்டிற்கு அனுப்பினார். அந்த கட்டைகளை எரிக்க ஊரெல்லாம் சந்தனம் மணந்தது.
இந்த சம்பவத்தால் பட்டக்காரர் மகத்துவத்தை புரிந்துகொண்ட சிற்பித்தலைவன் நேரே திருச்செங்கோடு வந்து மிக சிறப்பான முறையில் கோவிலின் சிர்ப்பங்களை வடித்து கொடுத்தார். கோவிலின் பிரகாரத்தில் அத்தப்ப நல்லதம்பி காங்கேயரின் சிலை உள்ளது. அவர்தம் மகனான திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயனும், செல்லகூட்ட பருத்திபள்ளி (இணைநாடு) பட்டகாரரும் கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இவர்கள் குறித்து கோவிலில் கல்வெட்டுக்களும் உள்ளது.
ஆதாரம்: கொங்கு நாடு (1931) - முத்துசாமி கோனார்
No comments:
Post a Comment