Trending

Tuesday 15 April 2014

GAIL கெயில் கேஸ்லைன் பிரச்சனை



தமிழர்களையும் உழவர்களையும் கிள்ளுக்கீரையாக நினைக்கும் போக்கு மத்திய அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. குறைந்த தூரமே பிடிக்கும் கேரளா வழி கேஸ் லைன் பதிப்பை விடுத்து தமிழ்நாடு வழியாக கொண்டு செல்ல திட்டமிடுவதே ஒரு சதி. பயனடையும் கேரளா கர்நாடக மக்கள்கூட தங்கள் நிலத்தில் கேஸ் லைன் பதிக்க எதிர்த்ததர்க்கு பணிந்த அரசு, தமிழ்நாடு வழியாக பதிக்கலாம் என்றதும் வெகு சுலபமாக சம்மதித்து விட்டது.


சரி அப்படித்தான் பதிப்பதை நெடுஞ்சாலை ஓரங்களிலும் ரயில்பாதை ஓரங்களிலும் பதித்துகொள்ளுங்கள் என்ற கோரிக்கையை சற்றும் பொருட்படுத்தாது தங்கள் பணியை துவங்கி விட்டனர். ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பால் நின்ற பணி, மக்களை மறக்க வைத்து திடீர் என இரு தினங்களுக்கு முன் பெரும்படையோடு வந்து விவசாய நிலங்களில் பயிர்களையும் மரங்களையும் அழித்து அராஜக வெறியாட்டம் ஆடி சென்றுள்ளனர். கேட்க நாதியற்ற மக்களாக தமிழ் விவசாயிகள் நின்றது பரிதாபம். வறட்சி காலத்திலும் பெரும் சிரமங்களுக்கு இடையே பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்த தென்னைகளையும் பயிர்களையும் பிடுங்கி எரிந்ததை கண்டு விவசாயிகள் கதறியது உள்ளத்தை உருக்கிவிடும் காட்சி. இப்படியும் மக்களை நோகடித்து, விவசாயத்தை அழித்து திட்டங்கள் செய்ய வேண்டுமா..? அதுவும் தமிழக விவசாயி மட்டுமே இளிச்சவாயனா..??

நிலத்தை ஆக்கிரமித்தது மட்டும் இன்றி இனி அந்த நிலத்தில் விவசாயிகள் நீர்பாய்ச்சுவதோ, மரம் நடுவதோ, வீடு கட்டுவதோ கூடாது. அந்த பைப்க்கு ஏதேனும் சேதம்-பிரச்சனை ஏற்பட்டால் நில உரிமையாளருக்கு சிறை உட்பட பல தண்டனைகளை அறிவித்து விவசாயிகலையே அவர்களின் கேஸ்லைன்க்கு சம்பளம் இல்லா காவல்காரனாக மாற்றுகிறார்கள். 

இது மத்திய அரசின் திட்டமே எனினும் மாநில அரசும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.இந்த அக்கிரமங்கள் பற்றி தமிழ் நாட்டில் யாரும் பெரிதாக கவலைப்படாது விவாதிக்காது இருப்பதும் ஆச்சரியமே. சிங்கூர் விவகாரத்தின் போது கொதித்து கிளம்பினவர்களும் காணாமல் போய் விட்டார்களே. தமிழ்நாட்டில் எது நடந்தாலும் யாருக்கும் தெரியாது போலும். அட கூடன்குலத்துக்கு குரல் கொடுத்தவர் கூட காணாமல் போனதேனோ..??





கேரளாவில் நெடுஞ்சாலை ஓரம்தான் கேஸ்லைன் பதிக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் நெடுஞ்சாலை ஓரம்தான் கேஸ்லைன் பதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலங்களுக்குள்தான் கேஸ் லைன் பதிப்பேன் என்று அராஜகம் செய்கிறார்கள் கெயில் நிறுவனத்தார்.


உயர்நீதி மன்ற வழிகாட்டுதலில், பாதிக்கப்படும் விவசாயிகள், தலைமை செயலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி, விவசாயிகள் ஒப்புதல் பெறவேண்டும்.தவிர, போலீஸார் விவசாயிகளை கட்டாயப்படுத்துக் கூடாது, எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளை இதுவரை அழைத்து கூட்டம் நடத்தவில்லை. இதுகுறித்து தலைமை செயலாளர் கூட்டத்தில், விவசாயிகள் எதிர்ப்பு உள்ளதாக, கலெக்டர் தெரிவித்தும், பைப் லைன் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எனவே இந்த கேஸ் லைன் திட்டம் தமிழகவிரோதம், விவசாய விரோதம் மட்டும் இன்றி சட்ட விரோதமும் கூட. ஏமாளி தமிழனை ஏய்க்கும் சுத்தமான அதிகார அராஜகத்தை மத்திய அரசு நிறுவனம் அரங்கேற்றி கொண்டிருக்கிறது!





கெயில் நிறுவனத்தின் கேஸ் லைன் பாதிக்கும் பணி நீதி மன்ற அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக நடக்கிறது. விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், மாவட்ட கலக்டரின் அறிவுறுத்தலை மீறி அராஜக போக்கில் கெயில் நிறுவனம் செயல் படுகிறது. கேரளாவிளும் பிற மாநிலங்களிலும் நெடுஞ்சாலை ஓரம் பைப் லைன் பதித்து விட்டு தமிழகத்தில் மட்டும் நிலங்களுக்குள் பொட்டு அராஜகம் செய்கின்றன.இவ்வளவு நடந்தும் கொங்கு இயக்கங்கள் தவிர பிற அரசியல் கட்சிகள் சரியான போராட்டங்களை எதிர்ப்பை காட்டவில்லை.


மேற்கு வங்க சிங்கூர் விவகாரத்தில் விவசாயிகளுக்காக நாடு முழுக்க கொதிக்கும்படியான போராட்டத்தை நடத்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எங்கே போயின..?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் என்ன செய்கிறது..? அதன் ஆட்சியில் பங்கு வகித்து வரும் திமுக என்ன செய்கிறது..? மாநிலத்தில் ஆளும் அதிமுக என்ன செய்கிறது..? திராவிட தீய சக்திகள் என எதுவுமே வரவில்லையே. தேமுதிக உள்ளதா..??

தற்போது மதிமுக எம்பி கணேசமூர்த்தி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சனை வெளிவந்து எவ்வளவு நாள் ஆகிறது, இவ்வளவு நாள் பாராளுமன்றத்தில் பேசாமலும், நடவடிக்கை எடுக்காமலும் தாமதித்து, கடைசிநேர போராட்டம் ஏன்..?

கூடங்குள போராட்டத்துக்கு ஓடி ஓடி உழைத்த அரசியல் பொதுநல இயக்கங்கள் இங்கு ஏன் காணாமல் போனார்கள்..? டெல்டா விவசாயிகளுக்கு கண்நீர்விட்டவர்கள் எங்கே..?? அரசியல் லாபம் இருந்தால்தானே கவுண்டர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்..?

சில விவசாய இயக்கங்கள் போராடின. கொங்கு கட்சிகள் களத்தில் பல்வேறு வகைகளில் பெருமுயற்சி மேற்கொண்டது. இவை தவிர எந்த ஒரு இயக்கமோ, கட்சியோ துணை வராது நம்மை கைகழுவி விட்டன.

தண்ணீர் இல்லா வறட்சி காலத்தில் காசுக்கு ட்ராக்டர் நீர் வாங்கி ஸ்ப்ரேயர் மூலம் நீர் தெளித்து காத்த பயிரெல்லாம்/மரமெல்லாம் அழிக்கப்பட்டது. பெற்ற பிள்ளையை கண் முன்னே கழுத்தறுத்தது போன்ற கொடுமைகள் அரங்கேறுகின்றன. கேட்க நாதியற்ற கவுண்டன் ஊமையாய்-அரசியல் அனாதையாய் போனான்!

கொங்கு நாட்டுக்கு அரசியல் முக்கியத்துவம் தேவை. அது இல்லாததுதான் இதுபோன்ற பிரச்சனைகள் வர காரணம். நமக்கான அரசியல் அங்கீகாரம் இல்லை. எந்த கட்சியும் நம்மை மதிப்பதில்லை. நாம் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்தே இருக்காது அல்லது தீர்ந்திருக்கும். இனியாவது சிந்திப்போம்!


மீடியாக்கள் செய்தி வெளியிடும் போது அரசு வேறு கெயில் வேறு என்பது போல, கெயில் நிறுவனம் குழாய் பதிக்கிறது; கெயில் வழக்கு நடத்துகிறது; கெயில் வாதாடியது என்கிறார்கள். கெயில் என்பது அரசு நிறுவனம் என்று ஊருக்கே தெரிந்த விஷயம் என்றாலும், அரசாங்கம் வேறு கெயில் நிறுவனம் வேறு என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. குறிப்பாக கிராம மக்கள்.. அவர்களுக்கு...

தமிழ்நாட்டில் இயற்கை விஞ்ஞானிகள், பூவுலகின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் யாரும் கெயில் பிரச்சனைக்கு வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. கொங்கு பகுதியில் இருந்து மத்திய/மாநில அரசு அதிகாரத்தில் இருப்பவர்களும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் கெயில் என்ன அவ்வளவு பெரிய கொம்பனா..? கெயில் மத்திய அரசின் நிறுவனம் தானே..??

கேட்க நாதியற்ற தமிழன் என்று முழங்கியவர்கள் கண்களுக்கு கொங்கு மக்கள் தமிழர்களாக தெரியவில்லையா..?? அல்லது கொங்கு பகுதியில் ஓட்டு வங்கி சிதறி கிடக்கிறது என்ற இளக்காரமா..??

இனி திராவிடன் என்றோ, தமிழன் என்றோ, இயற்கை போராளி என்றோ சொல்லிக்கொண்டு யாரும் தயவு செய்து என்னிடம் பேசாதீர்கள்..!
-thanks: sasi mapla



கேரளாவில், முதல் கட்ட பணியில், நெடுஞ்சாலை ஓரமாக கேஸ்லைன் பதிக்க ராஜ்ய சபாவில் முடிவு செய்யப்பட்டு மத்திய சர்க்காரின் பிரஸ் இன்பர்மேசன் பியுரியு வெளியிட்ட அறிக்கை. அரசு வலைதளத்தில்..!

http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=59695

கேரளாவிலும் டெல்லியிலும் நெடுஞ்சாலை ஓரமாக பதிக்கப்பட்ட கேஸ்லைன் தமிழகத்தில் மட்டும் நிலங்கள் வழியாக போயாக வேண்டுமா..? இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரத்தில் இருக்கும் கெயில் நிறுவன தலைவர் யார்? அந்த நிறுவனத்தில் முக்கால் பங்கு வைத்திருக்கும் மத்திய சர்க்காரால் அந்த நிறுவன தலைவரை மாற்ற முடியாதா..?? திட்டத்தை நிறுத்த முடியாதா??

இதை விட்டுவிட்டு மாநில சர்க்கார், மத்திய சர்க்கார், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கெயில் நிறுவனம் என பல அடுக்களாக/கோணங்களாக பிரித்து தலையை சுற்றி மூக்கை தொடும் கண்ணாமூச்சிகள் எதற்காக..??

கேரளாவில் போராடிய கம்யுனிஸ்ட்கள், மத்திய சர்க்கார் ஒரு புறம.. இங்கே தமிழுணர்வாளர்களும், திராவிட மணிகளும் ஊமையாகிவிட்டனரே..! அப்படியானால் கொங்கு மக்கள் தமிழரும் இல்லை, திராவிடரும் இல்லையா..? இயற்கை காவலர்களும், சமூக/முற்போக்கு சிந்தனையாளர்களும் மவுனமானதன் நோக்கம் என்ன..?? உங்களை கட்டி போட்டு வைத்திருக்கும் சக்தி எது..?? ஜெயமோகன் சொன்னது போல நீங்கள் எல்லாம் அந்நிய நிதிக்கு விலை போய், வெளிநாட்டு ஏஜென்ட்களாகத்தான் செயல்படுகிறீர்களா..??

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates